எழுத்தாளரின் அலைபேசி எண் : 9842XXX6XX

சித்ரா' வதை - 4


என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு வந்தியளாம்ல்ல.. பேசுங்க.. நான் பொழப்புக்குப் போகணும்.. - அனைத்து மாணவர்கள் மீதும் கண்களைச் சுழலவிட்டவாறு ஜனா கேட்டான்! அவனுக்கு பதிலளிக்க சிவா முற்பட்டபோது, அருகில் இருந்த சுரேஷ், 'வேண்டாம்.. நீ பேசாதே!'' என்பதாக கண்களால் எச்சரித்தான்!

ஜனாவுக்கு பதிலளிக்க சிலருக்கு ஆர்வம் இருந்தது. இருந்தாலும் தான் சொல்வதை இந்த முரடன் எவ்வாறு புரிந்துகொள்வானோ? ஒருவேளை சித்ராவை அனுப்பமுடியாது என்று சொல்லிவிடுவானோ என்ற தயக்கம் அவர்கள் வாயைக் கட்டிப் போட்டிருந்தது.

ஒருத்தரும் பேசமாட்டியளோ? சரி.. நான் கெளம்பறேன்! - போக்குக் காட்டினான் ஜனா. ஆர்த்தியின் காதலனான கணேஷ் இனியும் சும்மா இருப்பது சரியல்ல என்று முடிவெடுத்தான்.

அண்ணே! கொஞ்சம் பொறுங்க.. இதோ இவங்கதான் எங்க லீடர்! இவங்க வெவரஞ் சொல்லுவாக. ஆக்ச்சுவலா எங்களோட டூருக்கு ஒரு லேடி ப்ரொபசரும் வரதா இருந்துது. கடைசி நேரத்தில் அவங்களால வரமுடியல. அவங்க பொறுப்பை இந்த ஆர்த்திக்கிட்டதான் கொடுத்திருக்காங்க. இப்போ இவங்களே உங்களுக்குச் சொல்லுவாங்க! - என்று ஆர்த்தியைக் கை காட்டினான் கணேஷ்.

''பயபுள்ள எவ்ளோ நேக்கா கோர்த்து விட்டுருச்சு! வாடி மாப்ள.. வெளில போனதும் உனக்கு பொங்கல் வைக்கிறேன் என்று மனதுக்குள் வசைபாடினாள் ஆர்த்தி. ''சீக்கிரம் சொல்லுத்தா! சோலி கெடக்கு!'' என்று அருகில் இருந்த கணேஷைக் கிளப்பிவிட்டுவிட்டு அந்தச் சேரில் அமர்ந்தான் ஜனா.

மாமா! ப்ராஜக்ட் வர்க்குன்னு ஒரு படிப்பு இருக்கு! கடைசி வருசம் படிக்கறவங்க பூரா அதை படிச்சு பரிட்சை எழுதணும். பரிட்சைன்னா பேப்பர்ல எழுதற பரிட்சை இல்லே. நாலு நாலு பேராச் சேர்ந்து ஒரு சப்ஜெக்ட் பத்தி ஆராய்ச்சி செய்யணும். கட்டுரை எழுதணும். அந்த ப்ராஜக்ட் வர்க்குக்கு 200 மார்க் இருக்கு. அதை முழுசா வாங்க எல்லா மாணவர்களும் முயற்சி செய்யணும். அதுக்காகத்தான் நாங்க எல்லாம் அமைதியான ஒரு ஊருக்கு 10 நாள் போய்த் தங்கப் போறோம். இங்கயே இருந்தால், முழுக்கவனமும் ஆராய்ச்சியில் செல்லாது! உங்க சித்ராவையும் அனுப்பி வைங்க! - ஆரம்பத்தில் தடுமாறினாலும், தொடர்ந்து சரளமாகப் பேசினாள் ஆர்த்தி!

200 மார்க் எடுக்கற பரிட்சையா? அப்படின்னாச் சரி! சித்ராவோட சேர்ந்து படிக்கப்போற மத்த மூணு பேரு யாரு? ஆம்பளைகளும் அதில் இருக்காய்ங்களா?

இல்லே மாமா! ஒரே ஒரு குரூப் மட்டும்தான் ரெண்டு ஆம்பள ரெண்டு பொம்பள சேர்ந்திருக்காங்க. மத்த க்ருப் பூரா ஆண்கள் தனி. பொண்ணுக தனி! எங்க குரூப்ல நானு, உங்க ஊரு புள்ளைங்க அனிதா அப்புறம் காவ்யா. சித்ராவும் எங்ககூட இருக்கா!

இதுக்கு எவ்ளோ பணம் கட்டணும்?

அதெல்லாம் முந்தியே காலேஜ் பீஸ்ல சேர்த்து வாங்கிட்டாங்க மாமா! நாம ஒரு பைசா தரவேண்டியதில்லே! - தொடர்ந்து பொய்யுரைத்தாள் ஆர்த்தி.

சரி! அப்படின்னா போயிட்டு வாங்க! கட்டுன காசு வீணாப் போயிடப்படாதுல்ல? 200 மார்க் வேற குடுப்பாகன்னு சொல்றே! சரி.. உங்க குரூப்பு எதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணப் போகுது? - ஜனாவின் கேள்வியில் சக மாணவர்கள் மிரண்டனர். அச்சத்தோடு ஆர்த்தியின் முகத்தையே கவனித்தனர்.

எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம்தான் மாமா! ''HOW TO FILL AIR IN LOCOMOTIVE WHEELS?'' அப்படிங்கற சப்ஜெக்ட் மாமா. இந்த ஆராய்ச்சி செய்தா அமெரிக்காவில் உடனே வேலை ரெடி! - ஆர்த்தி நல்ல ஃபார்மில் இருந்தாள். ஃப்ளோவாக கப்ஸா வந்துகொண்டிருப்பதைப் பார்த்து சித்ராவுக்கே சிரிப்பு தாங்கவில்லை. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

அது நல்ல படிப்புதான்! சித்ராவை அனுப்பி வைக்கிறேன். பொறுப்பா அழச்சுட்டுப் போயிட்டு வாங்க! - என்று சொன்ன ஜனா சித்ராவின் பக்கம் திரும்பினான். ''இஞ்ச பாரு புள்ள.. கூட வர்ற தடிப்பயலுகளோட ஏதும் கூத்தடிக்கலாம்ன்னு திட்டத்தோட போகாதே! ஒழுக்கமா படிச்சுப்புட்டு திரும்பி வரணும். மாமனுக்கு எங்க தெரியப் போவுதுன்னு கும்மாளம் போடாதே. புரிஞ்சுதா? எப்போ வேணா நான் அங்க வந்து பாப்பேன். ஏதும் தப்பா இருந்துச்சு, அங்கேயே கட்டித் தொங்கவிட்டு தோலை உரிச்சுப்புடுவேன். நெனப்பிருக்கட்டும்!' என்று எச்சரித்தான். ராதிகாவிடமிருந்து 'களுக்'கென்று சிரிப்பு கேட்டது.

தோ பாரும்மா! போகவேணாம்ன்னா சொல்லுங்க. இங்கயே இருந்துடறேன். எதுக்கு என்கூட படிக்கிறவங்கள வச்சுக்கிட்டு என்னை அவமானப் படுத்தணும்? இதுநாள் வரைக்கும் நான் ஏதும் தப்பு பண்ணிருக்கேனா? - தாயிடம் புகார் செய்தாள் சித்ரா.

ஆமாண்டா தம்பி! நம்ம புள்ளைய நாமளே நம்பலேன்னா எப்படிப்பா? - தாய் பத்மா பலவீனமாக வாதாடினாள்.

நல்லாத் தெரியும்க்கா! கூடப் போறவங்களுக்கும் அந்த நெனப்பு இருக்கணும்ன்னுதான் எச்சரிக்கை பண்ணினேன். தாராளமா போயிட்டு வா சித்ரா. குடும்ப நிலைமையை மனசுல வச்சு நடந்துக்க. இந்தாம்மா மாடிவீட்டுப் பொண்ணு.. அனிதாதானே உன் பேரு? தினமும் காலேஜுக்கு அழச்சுட்டுப் போற மாதிரி சித்ராவ பொறுப்பா பாத்துக்க. உன்னைய நம்பித்தான் அனுப்பறேன். - இவ்வாறு சொன்ன ஜனா வேலைக்குக் கிளம்ப முற்பட்டான். வாசல் வரை போனவன் திரும்பி வந்தான்.

ஆமாம்.. இங்க சிவாங்கற பையன் வந்திருக்கானா? யார் அது? - அனைவரையும் பார்வையால் துழாவியவாறு ஜனா கேட்டான். கூட்டம்  அமைதி  காத்தது. ''இதோ.. இவந்தான்!'' சரத் ஆர்வமாக அடையாளம் காட்டினான். ஏற இறங்க சில விநாடிகள் சிவாவைப் பார்த்த ஜனா, சித்ராவிடம் போனான். அவளைத் தன் தோளோடு சேர்த்துப் பிடித்தவாறே சொல்லலானான்..

'இது நான் கட்டப்போற பொண்ணு! அனாவசிய கற்பனையெல்லாம் வளர்த்துக்கிட்டு அவஸ்தைப்பட வேணாம். சொல்றது புரியுதுல்ல?' என்று சொல்லிவிட்டு ஜனா வெளியேறினான். சற்றுநேரத்தில் அவனது பழைய பைக் கிளம்பும் ஒலி கேட்டது! ராதிகா, சரத் என்ற இரு உள்ளங்களுக்கும் காரணமில்லாத மகிழ்ச்சி தோன்றியது.

பத்மா, வைதேகியிடம் விடைபெற்றுக்கொண்டு மாணவர் குழாம் கல்லூரிக்குப் புறப்பட்டது. ஆர்த்தியை தன் ஸ்ப்ளென்டரில் சுமந்துகொண்டு போன கணேஷ் கேட்டான்..

அடி பாதகத்தி.. அந்த எம்டனையே வளைச்சுப் புளுவி அசத்திட்டியே! கில்லாடிடி நீ!

மவனே.. காலேஜ் போனதும் உனக்கு மண்டகப்படி இருக்கு. நல்லவேளை ஞாபகப்படுத்தினே!

அத விடுத்தா.. அதெல்லாம் ஏதோ புதுசா நடக்கற மாதிரி சொல்ற? என் உசிரை உனக்கு நேர்ந்துவுட்டுட்டுதானே லவ் பண்ணவே ஆரம்பிச்சேன். அது கெடக்கட்டும். அந்த மாமன்காரன்கிட்ட இங்கிலீஷ்ல ஏதோ ஆராச்சி சப்ஜெட்டு பேரு சொன்னியே.. அது என்னாதுத்தா?

எது? ஹவ் டு ஃபில் ஏர் இன் லொகோமோட்டிவ் வீல்ஸ்?.. அதுவா? உனக்கும் அது என்னான்னு தெரியலையா?

தெரியலத்தா.. அதனாலதானே மாமன் கேட்கறேன்..

மாக்கான்.. மாக்கான்.. ரயில் சக்கரத்துக்கு காத்து அடிக்கிறது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணப் போறதா சொன்னேன்டா வெண்ண!

அடிப்பாவி மவளே! - கணேஷ் சிரித்த சிரிப்பில் ஸ்ப்ளெண்டர் ஆட்டம் கண்டது!

______________________________

கொளுக்குமலைக்கு புறப்படும் நாள்..

காலை மணி 10:00. வாகனத்தோடு கிட்டாவும் போண்டாவும் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிட்டனர். பயணத்துக்குப் புறப்படும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்தனர். எல்லோரும் வந்து சேர மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. ஒருவழியாக கிட்டா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது சங்கீதா கத்தினாள். ''வேண்டாம்.. வேண்டாம்.. நிப்பாட்டுங்கோ!''

ஏண்டி மாமி கிளம்பறப்போ அபசகுனமா கத்தற? எங்களுக்கு ஆயிரம் தர்ம நாயம் சொல்லுவே. நீயே இப்படிப் பண்றே! - விஜய் சிடுசிடுத்தான்.

ஸாரி விஜய்! இப்போதான் கவனிச்சேன். ராகுகாலம் ஸ்டார்ட் ஆய்டுத்து. 12 மணிக்கு மேலதான் கிளம்பணும். எல்லாம் ஒவ்வொரு வாய் தேர்த்தம் விட்டுக்கோங்க!

சரிங்க! அவங்க சொல்றதும் சரிதான். எல்லோரும் இறங்கி காலேஜ்ல வெயிட் பண்ணுங்க. நான் நிழல்ல வண்டியை போட்டு வைக்கிறேன். - கிட்டா சொல்லவே கூட்டம் கீழே இறங்கிற்று.

டீ சித்ரா! நாமல்லாம் போறதுக்கு முந்தி கடைசியா சேர்ந்து ஒரு செல்ஃபீ எடுத்துப்போம்டி! - ஷாலினி யோசனை சொல்ல, அனிதா கடுகடுத்தாள். 'மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஷாலூ! அது என்ன கடைசியா? இதுக்கப்புறம் நாம சேரவே போறதில்லியா என்ன?''

ஏய்! ஏதோ தெரியாமச் சொல்லிட்டா! விடுடி. வா.. எல்லாரும் போய் ஒன்னா போட்டோ எடுத்துப்போம். செல்ஃபீ வேண்டாம். பக்கா ஃபோட்டோவா நம்ம பிரபுவை விட்டு எடுக்கச் சொல்லுவோம் - குஷ்பூ சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றாள்.

எங்கடி? ஏழு பேர்தான் இருக்கோம்.. மத்த மூணு பேரும் எங்கே?

ராதிகாவைப் பத்தி தெரியாதா? சித்ராவோட போட்டோல அவ நிக்கமாட்டா. அந்த ரெண்டு குண்டுகளும் வண்டியை விட்டு இறங்கவே இல்லே! அங்க பார்.. ஆர்த்தியும், க்ரேசும் என்ன பண்றாளுகளோ தெரியல. வண்டியே ஆடுது பாரு! - குறும்பாகச் சொன்னாள் காவ்யா!

மற்ற ஏழு பேரும் மட்டும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இனி அவர்கள் ஒருபோதும் ஒன்றிணையப் போவதில்லை என்று எவருக்கும் அப்போது தெரியாது!

______________________________

நண்பகல் 12 மணி ஆனது.

சக்கரத்துக்கு எலுமிச்சம் பழம் வைத்து, கற்பூரம் காட்டி தேங்காய் சிதறவிட்ட பிறகு வண்டி கிளம்பிற்று.

உள்ளே இருவர் இருவராக அமரும் இருக்கைகள் எட்டும், பின்பகுதியில் நால்வர் அமரும் நீண்ட இருக்கை ஒன்றும் இருந்தன.

ஆர்த்திப் பாப்பா! ரோடு கொஞ்சம் சரியிருக்காது போல! வண்டி ரெம்பத் தூக்கிப் போடாம இருக்க ஒரு வழி சொல்றேன் கேளு. நீயும், க்ரேசும் லாஸ்ட் நாலு பேர் சீட்டுல குந்திக்கங்க. பின் பாரம் ஜாஸ்தி இருந்தா வண்டி குதிக்காது! நீங்களும் செலாவணியா பட்'ஸை பார்க் பண்ணலாம்! நூல் அளவுக்கு கேப் விட்டு வைங்க. நானும் மாப்ளை கருணாசும் வந்து ஒண்டிக்கறோம். - கணேஷ் யோசனை சொன்னான்.

எல்லோரும் தங்கள் இணையோடு சேர்ந்து அமர்ந்தனர். வாசல் படியை ஒட்டினாற்போல் இருந்த இரட்டை இருக்கைகளில் அனிதாவும் சுரேஷும் நிறைந்தனர். சித்ரா மட்டும் சிவாவின் இருக்கையில் அமராமல் தயங்கி நின்றாள்.

ஏண்டி நிக்கிறே? சிவா பக்கத்தில் சீட் இருக்கு பாரு. போய் ஒக்காரு! - அனிதா கை காட்டினாள்.

இல்லே.. வேணாம்டி! நான் இங்கேயே ஒக்காந்துக்கறேன். வாசல் படியில் காலை வைத்தவாறு கீழேயே உட்கார்ந்துவிட்டாள் சித்ரா. நிலைமையைப் புரிந்துகொண்ட அனிதா, சுரேஷின் காதைக் கடித்தாள். அவன் வேண்டா வெறுப்பாக எழுந்து சிவாவோடு அமரப் போனான். போகும்போது, சித்ராவிடம் குறைப்பட்டுக் கொண்டான்..

ஆத்தா சித்ரா! நீ அநியாயத்துக்கு டெர்ரரிசம் பண்றே! அங்க பாரு. எல்லாம் தம்பதி சமேதரா அருள் பாலிக்கறாங்க. பிரபு கடலை மட்டும் போடல. குஷ்பு கழுத்தில் கையையே போட்டுட்டான். சாது ஜோடி திலீப் - காவ்யாகூட எவ்ளோ குஷாலா குந்தியிருக்குதுக பாரு. அவ்ளோ ஏன்? கதவிடுக்கில் மாட்டின நிலையில் இருக்கும் கணேசும், கருணாசும் கூட எவ்ளோ ஆனந்தமா காட்சி தரானுக பாரு. என்னை மட்டும் இந்த சிவா தடிப்பயலோட சோடி கட்ட வச்சுட்டியே.. நியாயமா?

சுரேஷ்.. போதும் புலம்பல்! போய் குத்தவைடா! - அனிதா அடிக்குரலில் எச்சரித்தாள்.

ஏய் அனி! எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லடி. இங்கேயே வசதியாத்தான் இருக்கு. எதுக்கு சுரேஷை விரட்டறே? - தயங்கியவாறே கேட்டாள் சித்ரா.

அந்த ஊரு நாயம்லாம் பேசாதே! நீ கீழ உட்கார்ந்திருக்கும்போது நாங்க எப்டி மேல உக்காந்துக்கறது? எந்திரிச்சு வந்து என் பக்கத்தில் ஒக்காரு! - விவகாரத்தை முடித்து வைத்தாள் அனிதா.

ட்ரைவர் சார்! பின்னாடி ஒரு மாட்டு வண்டி சைடு கேட்குது. கொஞ்சம் ஒதுக்கி ஓட்டுங்க! - கருணாஸ் குரல் கொடுத்தான்.

அண்ணே.. அவர் சொல்றாருன்னு உணர்ச்சிவசப்பட்டு ஆக்சிலேட்டரை அமுக்கிடாதே! - பானட்  மீது  உட்கார்ந்திருந்த  போண்டா காதைக் கடிக்க, கிட்டா மறுமொழிந்தான். '' என்னையா அதுக்கு ஆள் பார்த்தே? ரைட்டு ரியர் கால் சரியில்லாம இருக்கேன்னு நானே கவலையில் வாரேன்!''

கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். மாணவர்களின் வாகனத்தை ஒரு கார் வந்து வழி மறித்தது. அதன்மீது மோதாமல் இருக்க, உயிரைக் கொடுத்து வண்டியை நிறுத்தினான் கிட்டா!

எழுத்தாளரின் அலைபேசி எண் : 9842XXX6XX

Comments

Popular posts from this blog